Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

அரசு பொதுத் தேர்வுகளில் சாதிக்கும் மாநகராட்சிப் பள்ளிகள்

Print PDF

தினமணி 03.03.2010

அரசு பொதுத் தேர்வுகளில் சாதிக்கும் மாநகராட்சிப் பள்ளிகள்

மதுரை, மார்ச் 2: தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வுகளில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றன என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறினார்.

நகர்ப்புறக் களஞ்சிய வட்டாரங்கள் இணைந்து உருவாக்கிய களஞ்சிய நகர்ப்புற மண்டலத்தின் 10-ம் ஆண்டு நிறைவு, உலக மகளிர் தினம், நகர்ப்புற மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் மாநகராட்சி கமிஷனர் பேசியதாவது:

நாட்டின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக கேரளம் திகழ்வதற்குக் காரணம் அங்கு படித்தவர்கள் அதிகம் இருப்பதுதான். எனவே உலக அரங்கில் இந்தியா சிறந்த நாடாகத் திகழ வேண்டும் எனில் கல்வியறிவில் மக்கள் சிறந்து விளங்க வேண்டும். வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்நோக்கத்தை முன்வைத்தே மதுரை மாநகராட்சி செயல்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகப் பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சியை எட்டி வருகின்றன.

மேலும், மதுரை நகருக்குள் இருக்கும் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சொந்த இடமிருந்தால் சிமிண்ட் வீடு கட்டிக்கொள்ள அரசு ரூ.91 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இச்சலுகையை மக்கள் பயன்படுத்தி வீடு கட்டட வேண்டும் என்றார்.

மாநகராட்சி செயற்பொறியாளர் சக்திவேல் பேசுகையில், மதுரை மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 82 சதம் என்பதை வரும் ஆண்டில் 95 சதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை வாழ்த்திப் பேசினார். களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் அகிலாதேவி அறிக்கை வாசித்தார். மாநகராட்சி முதன்மை சுகாதார அலுவலர் சுப்பிரமணியன், களஞ்சிய அறக்கட்டளை முதன்மை நிர்வாகி பத்மாவதி, எல்.ஐ.சி. கிளை மேலாளர் சுந்தரராஜன், கனரா வங்கி கிளை மேலாளர் தனபாண்டியன் ஆகியோர் பேசினர்.

முன்னதாக மருத்துவக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மதுரை மண்டல களஞ்சிய இயக்கத் தலைவி தாயம்மாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:28
 

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை

Print PDF

தினமணி 02.03.2010

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை

நாமக்கல், மார்ச் 1: கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நாமக்கல்லில் சிலை அமைக்கப்படும் என, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் செ. காந்திச் செல்வன் தெரிவித்தார்.

நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா, முன்னாள் மாணவரும் மத்திய இணை அமைச்சருமான செ. காந்திச் செல்வனுக்கு பாராட்டு விழா, பள்ளி வெள்ளி விழா, அதிக மதிப்பெண் பெற்றோருக்கு பரிசளிப்பு விழா, ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் சகாயம் பேசியது:

தமிழகத்திலேயே கல்வியில் முன்னோடி மாவட்டமாக உள்ளது நாமக்கல். ஆண்டுதோறும் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே மாநில சாதனை படைத்து வருகின்றனர். அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் நடப்பாண்டு மாநில அளவில் சாதனை படைக்க தயார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

புதிய கட்டடத்தை திறந்து வைத்து மத்திய இணை அமைச்சர் செ. காந்திச் செல்வன் பேசியது:

கல்விக்கு பெருமை தேடித் தந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து, மாநில அளவிலான சாதனைக்கு எட்டும் தூரத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவியர் வந்துள்ளனர். வரும் காலங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள்தான் மாநில சாதனையை எய்துவர் என்ற நிலை உருவாகும். இதேபோல், அரசு பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கோட்டை நகராட்சிப் பள்ளிக்கு தற்போது ரூ. 50 லட்சத்தில் கட்டடம் கட்டித்தரப்பட்டுள்ளது. தொடர்ந்து இப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியால் மட்டுமின்றி கவிஞராலும் நாமக்கல்லுக்கு வரலாற்று பெருமை உள்ளது. இவரது பெருமையைப் போற்றும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10 மாடி கட்டடத்துக்கு கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சேர்க்கும் வகையில் கவிஞர் வாழ்ந்த நாமக்கல் மண்ணில் அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும். இந்த சிலை திறப்பு விழாவுக்கு முதல்வர் கருணாநிதியை அழைத்து வந்து கவிஞரின் சிலை திறந்து வைக்கப்படும். கோட்டை நகராட்சிப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்துக்கு கவிஞரின் பெயர் சூட்டப்படும் என்றார் அவர்.

Last Updated on Tuesday, 02 March 2010 10:01
 

ஜெர்மன் பல்கலை மாணவர் மாநகராட்சி செயல்பாடு ஆய்வு

Print PDF

தினமலர் 25.02.2010

ஜெர்மன் பல்கலை மாணவர் மாநகராட்சி செயல்பாடு ஆய்வு

கோவை : கல்வி சுற்றுலா வந்த ஜெர்மன் பல்கலை மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி பணிகள் குறித்து ஒரு நாள் பயிற்சியளிக்கப்பட்டது.

ஜெர்மனி நாட்டின் கவுஸ்டனிலுள்ள, "யுனிவர்சிட்டி ஆப் அப்ளைய்டு சயின்ஸ்' என்ற பல்கலை பொருளாதாரத்துறையை சேர்ந்த 19 மாணவர்கள், கோவைக்கு கல்வி சுற்றுலா வந்தனர். ஆனைகட்டியிலுள்ள "கார்ல் க்யூபல் இன்ஸ்டியூட்' நிறுவனத்திற்கு ஜெர்மன் பல்கலை கழக மாணவர்கள், வந்தனர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை சார்ந்த விஷயங்களை கற்றறிந்தனர்; கள பயிற்சியும் பெற்றனர். பயிற்சியின்போது, பொதுமக்களின் கல்வி வளர்ச்சி, கல்வியின் நிலை, சமூக நிலை, பொருளாதார மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சியின் நிர்வாக அமைப்பு, பணிகள், அதிலுள்ள துறைகள் குறித்து தெரிந்து கொள்ள கோவை வந்தனர். மாநகராட்சி கமிஷனரை சந்திக்கவும், ஜெர்மனி பல்கலை மாணவ, மாணவியர் வந்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, நிர்வாகம், கவுன்சில் தேர்வு பற்றி விளக்கினார். "கார்ல் கியூபல்' நிறுவன மேலாளர் மாலதி, திட்ட இயக்குனர் நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 25 February 2010 06:35
 


Page 78 of 111