தினமலர் 09.02.2010
வரவேற்பு! மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிப்பாடம் : வடசென்னையில் அதிக மாணவர்கள் சேர்க்கை
சென்னை : சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்ட ஆங்கில வழி பாடப்பிரிவு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், வரும் பட்ஜெட்டில் ஆங்கில வழி வகுப்புகளை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட், அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இதில், சுகாதாரத் துறைக்கும், கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதில், கல்வித்துறையில் குறிப் பாக, ஆரம்ப பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பாடப்பிரிவு வகுப்புகளை அதிகப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல், சென்னை மாநகராட்சியில் 25 ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில மொழி பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மண்டலத்திற்கு குறைந்தது இரண்டு பள்ளிகள் வீதம், 10 மண்டலங்களிலும் 24 பள்ளிகளில் தொடங்கப்பட்டன.
இதில், 662 மாணவர்களும், 640 மாணவிகள் என மொத்தம் 1,302 மாணவ மாணவியர் சேர்க்கப்பட் டுள்ளனர். தற்போது, ஆங்கில மொழி பாடப்பிரிவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வடசென்னையில் கண்ணதாசன் நகர், வில்லிவாக்கம், சி.பி., ரோடு, காரனேசன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கப்பட் டுள்ளனர்.
தென் சென்னையில் சைதாப் பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளில் மட்டும் அதிகளவு மாணவ மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். திருவான்மியூர் பள்ளியில் ஆங்கில வழி பாடப்பிரிவில், 79 பேரும், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பள்ளியில் 126 பேரும், வேளச்சேரியில் உள்ள பள்ளியில் 136 பேரும் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆங்கில வழி பாடப்பிரிவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், வரும் பட்ஜெட்டில் ஆங்கில வழி வகுப்புகளை இரட்டிப்பாக்கலாம் என்று கூறப்படுகிறது.