தினமணி 05.01.2010
திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிய நூலகக் கட்டடம்
தக்கலை, ஜன. 4: திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நூலகத்தை பத்மநாபபுரம் எம்எல்ஏ தியோடர் ரெஜினால்டுதிறந்துவைத்தார்.
இப் பகுதியிலுள்ள நூலகம் சுமார் 13 ஆண்டுகளாக பழைய ஓட்டுக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு இடவசதியில்லாததால் நூல்களை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வாசகர்கள் சார்பில் தியோடர் ரெஜினால்டு எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதிய நூலகக் கட்டடம் கட்ட பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதை எம்எல்ஏ திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில், திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவர் மாஜிதா, துணைத் தலைவர் ஜபகர், வார்டு உறுப்பினர்கள் மாகின், மலுக்முகமது, காதரியா, பக்கீர், ஜெயலட்சுமி, பொதுப் பணித் துறை கட்டடப்பிரிவு பொறியாளர் அருள்செல்வி, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் மீரான்மைதீன், புகாரி, நூலகர்கள் சஜீவன், சுனிதா, மாவட்ட திமுக துணைச் செயலர் ஜோசப்ராஜ், கிளைச் செயலர் சம்சுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.