தினமலர் 16.08.2010
சுதந்திர தின விழாவில் நடமாடும் வரிவசூல்வாகனம் துவக்கம்
திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று சுதந்திரதினவிழாவில் "நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையம்' வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.மாநகராட்சியில் மேயர் சுஜாதா தேசிய கொடியேற்றினார். எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கவுன்சிலர்கள் செந்தில்நாதன் மகள் பவித்ரா, ரங்கா மகள் சிந்துரா, ஜெயபாரதி மகள் ஜெனட்ரம்யா, சத்தியமூர்த்தி மகள் சவுமியா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.மாநகராட்சியில் 25 ஆண்டு மாசற்ற முறையில் பணியாற்றிய நகர பொறியாளர் ராஜாமுகமது, உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பொது சுகாதார துறை உதவியாளர் சுகுமார், அரிமங்கலம் கோட்ட மின்கம்பியாளர்கள் அன்பழகன், ராமச்சந்திரன், செயல்திறன் பணியாளர் சங்கர்ராவ், துப்புரவு பணியாளர் ரங்காயி ஆகியோருக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது."நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையம்' வாகனத்தை மேயர் சுஜாதா துவக்கி வைத்தார். துணைமேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தி அஸ்திக்கு மேயர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.