தினமலர் 18.08.2010
நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வாகனம்
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் "நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம்' வாகனம் நிற்கும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி சார்பில், "நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம்' வாகனம் உருவாக்கப்பட்டது. வரிவசூலில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2008-09ம் ஆண்டு பொதுநிதியிலிருந்து 7.45 லட்சம் ரூபாய் செலவில் பழைய வாகனத்தை புதுப்பித்து, இரண்டு கம்ப்யூட்டர், பிரிண்டர் இடம்பெற்றுள்ளது. நவீன "3ஜி' வசதியுடன் வலைதள இணைப்புள்ளது. ஜெனரேட்டர், யு.பி.எஸ்., மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.மாதந்தோறும் முதல் வாரம் ஸ்ரீரங்கம், இரண்டாவது வாரம் அரியமங்கலம், மூன்றாவது வாரம் பொன்மலை, நான்காவது வாரம் கோ.அபிஷேகபுரம் என நான்கு கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வகனம் வலம் வரும். வங்கி பணியாளர் வரிவசூல் பணி மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பு மாதம் மூன்றாவது வாரம் என்பதால், பொன்மலை கோட்டத்தில் திங்கள் கிழமை முதல் சனி கிழமை வரை வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வார்டு, இடம், தேதி, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளன. வரிவிதிப்புதாரர்கள் அந்தந்த தேதியில் நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் வாகனத்திலேயே வரியை செலுத்தலாம். அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் வாகனம் நிற்கும் நேரம்):இன்று 18ம் தேதி 35 (10 - 1), 37 (1 - 5) ஆகிய வார்டுகளில் ஜெ.கே.,நகர், வயர்லெஸ் ரோடு (திலகவதி மளிகை கடை எதிரே) நிற்கும். 19ம் தேதி 38 (10 - 1), 42 (1 - 5) வார்டுகளில் சாத்தனூர் மெயின் ரோடு (தேவி திருமண மண்டபம் அருகில்), சுந்தர் நகர் ஆகிய இடங்களில் நிற்கும். 20ம் தேதி 39வது வார்டில் பட்டி மெயின்ரோடு (கே.ஆர்.எஸ்.,நகர்) (10 - 1), பஞ்சப்பூர் மாநகராட்சி பள்ளி (1 - 5) ஆகிய இடங்களில் நிற்கும். 21ம் தேதி 44 (10 - 11.30), 46 (11.30 - 1), 47 (1 - 2.30), 48 (2.30 - 5) கீழப்பள்ளத்தெரு (செடல் மாரியம்மன் கோவில் எதிரில்), ராஜா காலனி, கான்வென்ட் ரோடு ஆகிய இடங்களில் நிற்கும். அந்தந்த பகுதி மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வாகனத்தில் வரி செலுத்தி, உரிய ரசீது பெற்றுச் செல்லலாம்.