தினகரன் 27.08.2010
நடமாடும் வரி வசூல் வாகனத்தில் எல்லா வார்டு மக்களும் வரி செலுத்த ஏற்பாடு
திருச்சி, ஆக 27: நடமாடும் வரி வசூல் வாகனத்தில் அனைத்து வார்டு மக்களும் வரி செலுத்தலாம் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
திருச்சி மாநகராட்சியில் தற்போது வரி வசூல் பணியினை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு நடமாடும் கணினி வரி வசூல் வாகனம் கடந்த 15ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தின் மூலம் வரி மற்றும் வரியில்லா இதர இனங்களின் வசூல் பணி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாகனம் மாதந்தோறும் முதல் வாரத்தில் ஸ்ரீரங்கம் கோட்டத்திலும், 2வது வாரத்தில் அரியமங்கலம் கோட்டத்திலும், 3வது வாரத்தில் பொன்மலை கோட்டத்திலும், 4வது வாரத்தில் அபிஷேகபுரம் கோட்டத்திலும் சுழற்சி முறையில் வரி வசூல் செய்யப்படுகிறது.
இந்த வகையில் கடந்த 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை பொன்மலை கோட்டத்தில் வசூல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 23ம் தேதி முதல் அபிஷேகபுரம் கோட்டத்தில் வசூல் செய்யப்படுகிறது. 28ம் தேதி வரை இந்த கோட்டத்தில் வசூல் செய்யப்படும். மேலும் இந்த நடமாடும் வரி வசூல் வாகனம் செல்லும் வார்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து வார்டு மக்களும் வரி செலுத்தலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.