மாலை மலர் 14.09.2010
சென்னையில் 155 வார்டுகளிலும் "ஆன்லைன்" மூலம் வரி செலுத்தும் வசதி மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, செப்.14- பாண்டி பஜாரில் அமைந்துள்ள 126-வது வார்டு அலுவலகத்தில் மேயர் மா.சுப்பிரமணியன், இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி சொத்து வரியை வசூலிக்க பல எளிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. வரி கொடுப்பவர்களுக்கு ரசீது வழங்க 300 கையடக்க கருவிகளை வரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளது. இதன் மூலம் வீடு வீடாக சென்று வரி வசூலிக்கப்படுகிறது.
தற்போது ரூ.50 லட்சம் செலவில் 155 வார்டுகளிலும் "ஆன்லைன்" மூலம் சொத்து வரி செலுத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் கம்ப்யூட்டர் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அங்கு சென்று சொத்து வரியை செலுத்தலாம். இனிமேல் மண்டல அலுவலகங்களுக்கு சென்று வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த வார்டுகளை சேர்ந்தவர்கள் அங்கு மட்டும்தான் வரி செலுத்த முடியும்.
2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூல் ரூ.232 கோடியாக இருந்தது. படிப்படியாக இது அதிகரித்து தற்போது ரூ.362 கோடியாக உயர்ந்துள்ளது. முறையாக வசூல் செய்தால் சொத்து வரியை உயர்த்தாமலேயே மாநகராட்சி வருமானம் அதிகரித்துள்ளது.
இனி வார்டு அலுவலகங்கள் மூலம் வரி வசூலிப்பதால் வருமானம் மேலும் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காக சனி-ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வார்டு அலுவலகங்களில் வரி செலுத்தலாம். திங்கட்கிழமை விடுமுறை நாள்.
கைஅடக்க கருவிகள் மூலம் வழங்கப்படும் ரசீதுகள் சரியில்லை என்றால், முன்பு ரிப்பன் கட்டிடத்தில் உள்ள தலைமை அலுவலகம்தான் செல்ல வேண்டும். இனி வார்டு அலுவலகங்களிலேயே இந்த பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழு தலைவர் ராதாசம்பந்தன், மண்டல தலைவர் ஏழுமலை, கவுன்சிலர் ஜெ.கருணாநிதி, மண்டல அதிகாரி யதுபுலராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.