தினமணி 15.09.2010
மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் சொத்து வரி செலுத்தும் மையங்கள்
சென்னை, செப்.14: சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி வார்டுகளிலும் | 50 லட்சத்தில் சொத்து வரி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தியாகராய நகர் பாண்டிபஜாரில் உள்ள 126-வது வார்டில் சொத்து வரி செலுத்தும் மையத்தை மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:
சென்னையில் உள்ள 155 வார்டுகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று சொத்து வரியை வசூலிப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 300 கையடக்க கருவிகள் வரி வசூலிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்போது சென்னையில் உள்ள அனைத்து வார்டு அலுவலகங்களிலும் சொத்து வரி செலுத்துவதற்கான மையங்கள் ரூ 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் திங்கள்கிழமை தவிர சனி, ஞாயிறு உள்ளிட்ட வாரத்தின் 6 நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சொத்துவரி செலுத்தலாம்.பொதுமக்கள் எளிதாகச் சொத்து வரி செலுத்துவதற்கு இந்த வசதி அனைத்து வார்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சொத்து வரியை உயர்த்தாமல், நிலுவைத் தொகையை வசூலித்ததன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதலாக சொத்துவரி கிடைக்கப் பெற்றுள்ளது. 2009-2010 ஆம் ஆண்டில் ரூ 362 கோடி வசூலானது. இந்த ஆண்டு 5 மாதங்களில் ரூ 112 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழுத் தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) ராதா சம்பந்தம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.