தினமணி 27.09.2010
ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க நேரில் வரத் தேவையில்லை: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
திருச்சி, செப். 26: திருச்சி மாநகராட்சியில் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை என மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகராட்சியில் மதிப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளில் கலந்துகொள்ள முன்வரும் ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள
ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மின்னணு முறையில் மட்டுமே அளிக்க வேண்டும்.
அதன்படி, திருச்சி மாநகராட்சியில் கடந்த 2009 ஆக. 26-ம் தேதி முதல் இணையதளத்தில் மின்னணு முறையில் ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மேலரண் சாலை மேம்படுத்துதல், அண்ணா நகர் இணைப்புச் சாலை அமைத்தல் மற்றும் இணைப்புச் சாலைக்கான பாலம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மேலும், சிறப்புச் சாலைகள் திட்டம் 2010-11-ன் கீழ் மொத்தம் ரூ.25 கோடியில் மேற்கொள்ளவிருக்கும் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளன.
இந்தப் பணிகளுக்கான மதிப்பீடுகள் அனைத்தும் ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளதால், ஒப்பந்தப்புள்ளிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஒப்பந்தக்காரர்கள் இணையதளத்தில் மின்னணு முறையில் ஏற்றம் செய்த பிறகு தொழில்நுட்பத் தகுதிக்காக ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையதளத்திலேயே ஏற்றம் செய்யலாம். அசல் ஆவணங்களை அஞ்சல் மூலம் உரிய காலக்கெடுவுக்குள் மாநகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக நேரில் வர வேண்டிய அவசியமில்லை.
மேலும், மாநகராட்சி வளாகத்தில் ஒப்பந்தக்காரர்கள் நேரில் வந்து சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டு மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.