மாலை மலர் 09.09.2009
இந்தியாவிலேயே முதல் முறையாக எஸ்.எம்.எஸ். மூலம் சொத்துவரி செலுத்தும் முறை; சென்னையில் அறிமுகம்
சென்னை, செப். 9-
எஸ்.எம்.எஸ். மூலம் சொத்து வரி செலுத்தும் முறை சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இதற்கான விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சொத்து வரி எளிய முறையில் செலுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் வரி வசூல் செய்வதற்கு "பிளாக் பெர்ரி" கருவி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 4-வது மண்டலத்தில் 24 மணி நேரம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் சொத்து வரி வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு ரூ. 4 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜி.பி.ஆர்.எஸ். பயன்பாட்டை பெற்றுள்ள செல்போன் மூலம் எந்தவித இடையூறு இல்லாமல் எஸ்.எம்.எஸ். அனுப்பி சொத்து வரியை செலுத்தலாம். NGPAY-என்ற தகவல் மையத்தை 56767 என்ற எண் மூலம் எஸ்.எம்.எஸ். வழியாக தொடர்பு கொண்டு பெயர் மற்றும் முகவரி, மின் அஞ்சல் ஆகிய தகவலை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்தவுடன் சொத்து வரி விவரத்தை பதிவு செய்து டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து சொத்து வரி செலுத்தி பரி மாற்ற குறியீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் சென்னையில் அனைத்து சொத்து உரிமையாளர்களும் தங்களது சொத்து வரியை மிகவும் எளிய முறையில் செலுத்தி பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சி தலைவர் ந.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.