தினமணி 06.03.2010
மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
சென்னை, மார்ச் 5: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை வேளச்சேரியில் உள்ள எச்.சி.எல். மையத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேயர் மா. சுப்பிரமணியன் இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் அவர் பேசியது:
சென்னை மாநகராட்சியில் பணிகளை எளிதாக்கும் வகையில், அனைத்துப் பணியிடங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கான பயிற்சியும், மின் ஆளுமை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியும் அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 150 அலுவலர்களுக்கு, ஒரு மாத காலத்துக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. படிப்படியாக அனைவருக்கும் பயிற்சி வழங்கப்படும் என்றார்.