Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

கணினி வசதி தொடக்கம் வார்டு ஆபீசிலேயே சொத்து வரி செலுத்தலாம்

Print PDF

தினகரன் 15.09.2010

கணினி வசதி தொடக்கம் வார்டு ஆபீசிலேயே சொத்து வரி செலுத்தலாம்

சென்னை, செப். 15: வார்டு அலுவலகங்களிலேயே கணினி மூலம் சொத்து வரி செலுத்தும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் நேரில் வரும் ஊழியர்களிடமும் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் மூலமும் சொத்துவரி செலுத்துகின்றனர். ரிப்பன் மாளிகைக்கு சென்றும் வரியை செலுத்தலாம்.

வார்டு அலுவலகத்திலேயே கணினி மூலம் சொத்துவரி செலுத்தும் புதிய சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள 126வது வார்டு அலுவலகத்தில் இந்த திட்டத்தை மேயர் மா.சுப்ரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது மேயர் கூறியதாவது:

2006ல் இந்த நிர்வாகம் பொறுப்பேற்ற போது சொத்துவரி வசூலிக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, சொத்துவரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு கையடக்க நவீன கருவி வழங்கப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காகவும், எளிதில் மிக விரைவாக சொத்துவரி செலுத்துவதற்காகவும் 155 வார்டு அலுவலகங்களிலும் கணினி மூலம் சொத்துவரி செலுத்தும் புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இதற்காக ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் இணையதள வசதியுடன் ரூ. 50 லட்சம் செலவில் கணினிகள் நிறுவப்பட்டுள்ளது. சொத்துவரி வசூல் 2005&2006ம் ஆண்டு ரூ.232 கோடியாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 2009&10ல் ரூ.362 கோடியாகி உள்ளது.

நிர்வாக சீரமைப்பு மேற்கொண்டதன் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் சொத்துவரியை உயர்த்தாமலே வசூல் அதிகரித்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன வசதி மூலம் எதிர்காலத்தில் சொத்துவரி வசூல் அதிகரிக்கும். எந்த வார்டு அலுவலகத்தில் வேண்டுமானாலும் சொத்துவரி செலுத்தலாம். வார்டு அலுவலகத்தில் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சொத்துவரி செலுத்தலாம்.

இவ்வாறு மேயர் கூறினார்.

மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டலக்குழு தலைவர் ஏழுமலை, கோட்டப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள 126வது வார்டு அலுவலகத்தில், கணினி மூலம் சொத்து வரி செலுத்தும் புதிய வசதியை தொடங்கி வைக்கிறார் மேயர் மா.சுப்பிரமணியன்.

 

மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் சொத்து வரி செலுத்தும் மையங்கள்

Print PDF

தினமணி 15.09.2010

மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் சொத்து வரி செலுத்தும் மையங்கள்

சென்னை, செப்.14: சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி வார்டுகளிலும் | 50 லட்சத்தில் சொத்து வரி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தியாகராய நகர் பாண்டிபஜாரில் உள்ள 126-வது வார்டில் சொத்து வரி செலுத்தும் மையத்தை மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:

சென்னையில் உள்ள 155 வார்டுகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று சொத்து வரியை வசூலிப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 300 கையடக்க கருவிகள் வரி வசூலிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்போது சென்னையில் உள்ள அனைத்து வார்டு அலுவலகங்களிலும் சொத்து வரி செலுத்துவதற்கான மையங்கள் ரூ 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் திங்கள்கிழமை தவிர சனி, ஞாயிறு உள்ளிட்ட வாரத்தின் 6 நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சொத்துவரி செலுத்தலாம்.பொதுமக்கள் எளிதாகச் சொத்து வரி செலுத்துவதற்கு இந்த வசதி அனைத்து வார்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சொத்து வரியை உயர்த்தாமல், நிலுவைத் தொகையை வசூலித்ததன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதலாக சொத்துவரி கிடைக்கப் பெற்றுள்ளது. 2009-2010 ஆம் ஆண்டில் ரூ 362 கோடி வசூலானது. இந்த ஆண்டு 5 மாதங்களில் ரூ 112 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழுத் தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) ராதா சம்பந்தம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

சென்னையில் 155 வார்டுகளிலும் "ஆன்லைன்" மூலம் வரி செலுத்தும் வசதி மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 14.09.2010

சென்னையில் 155 வார்டுகளிலும் "ஆன்லைன்" மூலம் வரி செலுத்தும் வசதி மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னையில் 155 வார்டுகளிலும்
 
 “ஆன்லைன்” மூலம் வரி செலுத்தும் வசதி 
 
 மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, செப்.14- பாண்டி பஜாரில் அமைந்துள்ள 126-வது வார்டு அலுவலகத்தில் மேயர் மா.சுப்பிரமணியன், இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி சொத்து வரியை வசூலிக்க பல எளிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. வரி கொடுப்பவர்களுக்கு ரசீது வழங்க 300 கையடக்க கருவிகளை வரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளது. இதன் மூலம் வீடு வீடாக சென்று வரி வசூலிக்கப்படுகிறது.

தற்போது ரூ.50 லட்சம் செலவில் 155 வார்டுகளிலும் "ஆன்லைன்" மூலம் சொத்து வரி செலுத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் கம்ப்யூட்டர் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அங்கு சென்று சொத்து வரியை செலுத்தலாம். இனிமேல் மண்டல அலுவலகங்களுக்கு சென்று வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த வார்டுகளை சேர்ந்தவர்கள் அங்கு மட்டும்தான் வரி செலுத்த முடியும்.

2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூல் ரூ.232 கோடியாக இருந்தது. படிப்படியாக இது அதிகரித்து தற்போது ரூ.362 கோடியாக உயர்ந்துள்ளது. முறையாக வசூல் செய்தால் சொத்து வரியை உயர்த்தாமலேயே மாநகராட்சி வருமானம் அதிகரித்துள்ளது.

இனி வார்டு அலுவலகங்கள் மூலம் வரி வசூலிப்பதால் வருமானம் மேலும் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காக சனி-ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வார்டு அலுவலகங்களில் வரி செலுத்தலாம். திங்கட்கிழமை விடுமுறை நாள்.

கைஅடக்க கருவிகள் மூலம் வழங்கப்படும் ரசீதுகள் சரியில்லை என்றால், முன்பு ரிப்பன் கட்டிடத்தில் உள்ள தலைமை அலுவலகம்தான் செல்ல வேண்டும். இனி வார்டு அலுவலகங்களிலேயே இந்த பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழு தலைவர் ராதாசம்பந்தன், மண்டல தலைவர் ஏழுமலை, கவுன்சிலர் ஜெ.கருணாநிதி, மண்டல அதிகாரி யதுபுலராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 23 of 41