தினமணி 17.08.2010
திருச்சியில் நடமாடும் கணினி வரி வசூல் வாகனம்
திருச்சி, ஆக. 16: திருச்சி மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து |ரூ 7.45 லட்சத்தில் பழைய வாகனத்தைப் புதுப்பித்து, இந்த நடமாடும் கணினி வரி வசூல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரு கணினிகள், பிரிண்டர்கள் உள்ளன. நவீன 3ஜி வசதியுடனான இணையதள இணைப்பு பெறப்பட்டுள்ளது.
மேலும், ஜெனரேட்டர், தடையில்லா மின்சாரம் வழங்கும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் ஸ்ரீரங்கம் கோட்டம், இரண்டாவது வாரம் அரியமங்கலம் கோட்டம், மூன்றாவது வாரம் பொன்மலைக் கோட்டம், நான்காவது வாரம் கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரி வசூல் வாகனம் மூலம் வரி வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த வாகனப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேயர் எஸ். சுஜாதா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நாளில் | ரூ12,619 வசூல்: இந்நிலையில், பொன்மலைக் கோட்டத்தில் நடமாடும் கணினி வரி வசூல் வாகனத்தின் மூலம் வரி வசூலிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை 30-வது வார்டு விவேகானந்த நகரிலும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் 31-வது வார்டு பொன்னேரிபுரத்திலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 36-வது வார்டு அடைக்கல மாதா கோவில் தெருவிலும் வரி வசூல் நடைபெற்றது. முதல் நாளில் ரூ|12,619 வசூலானது.
இந்த வாரம்...: செவ்வாய்க்கிழமை: காலை- 34-வது வார்டு என்.எம்.கே. காலனி (டோல்கேட்), பிற்பகல்- 43-வது வார்டு இலுப்பூர் கல்லுக்குழி.
புதன்கிழமை: முற்பகல்- 35-வது வார்டு ஜெ.கே. நகர், பிற்பகல்- 37-வது வார்டு வயர்லெஸ் ரோடு. வியாழக்கிழமை: முற்பகல் 38-வது வார்டு- சாத்தனூர் மெயின் ரோடு, பிற்பகல்- 42-வது வார்டு சுந்தர்நகர்.
வெள்ளிக்கிழமை: முற்பகல்- 39-வது வார்டு எடமலைப்பட்டி மெயின்ரோடு, கேஆர்எஸ் நகர், பிற்பகல்- பஞ்சப்பூர் மாநகராட்சி பள்ளி அருகில். சனிக்கிழமை: காலை 10 மணிக்கு 44-வது வார்டு கீழ பள்ளத்தெரு (செடல் மாரியம்மன் கோயில் எதிரில்), பகல் 1 மணிக்கு 47-வது வார்டு ராஜா காலனி, பிற்பகல் 2.30 மணிக்கு 48-வது வார்டு கான்வென்ட் ரோடு.