தினகரன் 01.06.2010
நாசரேத், கழுகுமலை உட்பட 22 பேரூராட்சி பஸ் நிலையங்களில் சிமென்ட் தளம் அமைக்க ரூ.3.50 கோடி ஒதுக்கீடு
நெல்லை, ஜூன். 1: தமிழகத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் இருக்கும் பஸ் நிலையங்களில் சிமென்ட் தளம் அமைக்க ரூ.3.50 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பேரூராட்சி பஸ் நிலையங்களில் பஸ் நிற்கும் இடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இவற்றை சீரமைத்தால் பஸ்கள் மிக எளிதில் சென்று வர முடியும். குறிப்பாக மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமப்படுவதை தவிர்க்கலாம் எனவும், இதற்கு ரூ.4 கோடியே 48 லட்சம் செலவாகும் என மதிப்பீடு தயாரித்து பேரூராட்சிகள் இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த கருத்துருவை அரசு ஆய்வு செய்து 2010&11ம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 22 பேரூராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்களில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதற்கான நிதியையும் அரசு விடுவித்தது.
விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பேரூராட்சி மன்றத்தில் ஒப்புதல் பெற்றவுடன் அந்தந்த பேரூராட்சிக்கு நிதியை பகிர்ந்தளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், கயத்தாறு, கழுகுமலை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்களில் தலா ரூ.15 லட்சம் செலவில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.