தினகரன் 08.06.2010
செங்கம் பஸ் நிலையத்துக்கு சிமென்ட் தளம் அமைக்க நிதி தமிழக அரசு ஒதுக்கியது
வேலூர், ஜூன் 8: தமிழகத்தில் பேரூராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்கள் பெரும்பாலும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன. வாகனங்கள் எளிதில் பஸ் நிலையங்களுக்குள் சென்று வர முடியாத நிலை இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து மிகவும் மோசமாக உள்ள பேரூராட்சி பஸ் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் தி.மலை மாவட்டம் செங்கம், சேலம் மாவட்டம் மேச்சேரி, சங்ககிரி, கொளத்தூர், இடங்கணா சாலை, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், தர்மபுரி மாவட்டம் பொ.மல்லபுரம், பெண்ணாகரம், கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் முத்தூர், திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை, காட்டுப்புத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி, தேனி மாவட்டம் உத்தமபாளையம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், கயத்தாறு, கழுகுமலை ஆகிய 22 பேரூராட்சிகளின் பஸ் நிலையங்கள் மிக மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து 2010&11ம் ஆண்டு பகுதி&2 திட்டத்தின் கீழ் மேற்கண்ட பேரூராட்சி பஸ் நிலையங்கள் அனைத்தும் சிமென்ட் தளங்களாக மாற்ற ரூ.3 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.