தினமலர் 10.06.2010
ரூ.57 லட்சத்தில் புது பஸ் ஸ்டாண்ட்
ஓசூர்: ஓசூர் அடுத்த ராயக்கோட்டையில் பொதுமக்களின் நீண்டநாள் கனவு நிறை வடையும் வகையில் 57 லட்சம் ரூபாயில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. ஓசூர் அடுத்த ராயக்கோட்டை முக்கிய வியாபார நகரமாக விளங்குகிறது. இங்கு தமிகத்திலே பெரிய தக்காளி சந்தை செயல்படுகிறது. இதுதவிர காய்கறிகள், பூக்கள் அதிகளவு உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மக்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் அதிகரித்து வந்தநிலையில், ராயக்கோட்டையில் தரமான பஸ்ஸ்டாண்ட் இல்லாமல் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் கடும் அவதிய டைந்து வந்தனர். ராயக்கோட்டையில் இயங்கி வந்த பழைய பஸ்ஸ்டாண்ட் அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாமல் நீர் தேங்கி வந்ததால், மாவட்ட நிர்வாகம் இரு ஆண்டுக்கு முன் முள்வேலி போட்டு சீல் வைத்தது.
இதனால், பஸ்கள் சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி, இறங்கி வந்தது. இதனால், கூடுதல் போக்குவரத்து நெருக்கெடி ஏற்பட்டது. நகரில் தரமான புதுபஸ்ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ராயக்கோட்டையில் 57 லட்சம் ரூபாயில் புதுபஸ்ஸ்டாண்ட் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, ராயக்கோட்டையில் புதுபஸ்ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜைவிழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதி, மாவட்ட கவுன்சிலர் சின்ராஜ், யூனியன் கவுன்சிலர்கள் சாந்தி, ராமி, கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி எம்.பி., சுகவனம், எம்.எல்.ஏ., செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். கெலமங்கலம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் அரியப்பன், பஞ்சாயத்து யூனியன் உதவி செயற்பொறியாளர் சண்முகம், வட்டர வளர்ச்சி அலுவலர் விஜயன், உதவி பொறியாளர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.