தினகரன் 10.06.2010
ஸ்டான்லி மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்கல் தீர்க்க ரூ.15 கோடியில் சுரங்கப்பாதை செப்டம்பரில் திறப்பு
தண்டையார்பேட்டை, ஜூன் 10: ‘‘ஸ்டான்லி மருத்துவமனை அருகே ரூ.15.76 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்படும்’’ என்று மேயர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி, தென்னக ரயில்வே ஆகியவை சார்பில், ரூ.15.76 கோடியில் ஸ்டான்லி மருத்துவமனை அருகேயுள்ள எம்.சி. சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வட சென்னை மக்களின் 40 ஆண்டு கால கனவான இந்த சுரங்கப்பாதை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் கிடப்பில் போட்டனர்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க முதல்வரும், துணை முதல்வரும் உத்தரவிட்டனர். அதன்படி, ரூ.15.76 கோடியில் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் நிறைவு பெற்று, செப்டம்பரில் சுரங்கப்பாதை திறக்கப்படும்’’ என்றார்.