தினமலர் 17.06.2010
புதிய பஸ் ஸ்டாண்ட்: இன்று முதல் அனுமதி
கோவை : மேட்டுப்பாளையம் ரோடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரே அமைந்துள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. கோவை - மேட்டுப்பாளையம் ரோடு அரசு போக்குவரத்து கழகத்திற் எதிரே உள்ள பகுதியில் ஏழு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டட திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். பஸ் ஸ்டாண்ட் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, பில்லூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து வரும் அனைத்து பஸ்களும் முன்பு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வரை இயங்கி வந்தன. தற்போது இந்த பஸ்கள் அனைத்தும், புதிய பஸ்ஸ்டாண்ட் வரை இயங்கும். கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு செல்லும். இங்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "புதிய பஸ்ஸ்டாண்ட் வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துதரப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பிடம், ஓய்வறை, பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன' என்றார்.