தினமணி 17.06.2010
மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் இன்று முதல் இயங்கும்
கோவை, ஜூன் 16: புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையம் வியாழக்கிழமை முதல் இயங்கும் என்று, கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் 3 ஏக்கரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தபடி இதுவரை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள், வியாழக்கிழமை முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.மக்களுக்கு வசதியாக உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களுக்கு நகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.