தினமணி 02.08.2010
திறப்பு விழா முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத பஸ் நிலையம்!
ஒசூர், ஆக. 1: ஒசூர் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா முடிந்தும் பயன்பாட்டுக்கு வராததால் நகர மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரூ.11 கோடியில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை ஜூலை 18-ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். ஜூலை 25-ம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பஸ் நிலையத்தில் சுங்கக் கட்டணம், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், கழிவறை ஆகியவற்றுக்கான ஏலம் நிறைவு பெற்றவுடன், ஆகஸ்ட் 1 முதல் பஸ்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி நடைபெற்ற ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்துவது என்று ஒசூர் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால், ஆக. 1-ம் தேதி பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. திறப்பு விழா முடிந்து பல நாள்களாகியும், புதிய பஸ் நிலையம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஒசூர் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏ. சத்யாவிடம் கேட்ட போது, பஸ் நிலையம் ஆக. 5-ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என்றார்.