தினகரன் 06.08.2010
ஓசூர் நகராட்சியில் நவீன பேருந்து நிலையம் பயணிகள் பயன்பாட்டிற்கு திறப்பு
ஓசூர், ஆக.6: ஓசூரில் ரூ.11 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. ஓசூர் நகராட்சியில், ரூ.11 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையம் கடந்த 2007 ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த மாதம் 18ம் தேதி துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நவீன பேருந்து நிலையத்தில் 64 வணிக வளாகக்கடைகள், 2 ஹோட்டல்கள், பேருந்து அலுவலகங்கள் ஆகியவை உள்ளன. இந்நிலையில் இந்த அதிநவீன பேருந்து நிலையம் மக்கள் மற்றும் பயணிகள் பயன்பாட்டுக்காக நேற்று திறக்கப்பட்டது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஓசூர் நகர்மன்றத்தலைவர் சத்யா, துணைத்தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் நாகராஜ், குமார், ஜெய் ஆனந்த், அனுசுயா, லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பயணிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நகர்மன்றத் தலைவர் சத்யா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பேருந்து நிலையம் முன் தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் அமைக்காமல் இருக்க மக்களை கேட்டுக்கொண்டார்.