தினமணி 10.08.2010
வந்தவாசி புதிய பஸ் நிலையப் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை
வந்தவாசி, ஆக. 9: வந்தவாசி புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற என்.உசேன் பாரூக் மன்னர் (படம்) கூறினார்.
திங்கள்கிழமை ஆணையராக பொறுப்பேற்ற அவர் நிருபர்களிடம் கூறியது:
வந்தவாசி நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க செய்யாற்றில் |10 லட்சம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து அனக்காவூர் நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டவுடன் இக்கிணறு பயன்பாட்டுக்கு வரும்.
வந்தவாசி 5 கண் பாலம் அருகிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல அணுகுச் சாலை அமைப்பதற்காக அரசு புறம்போக்கு, இந்து அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்றார்.