தினமணி 04.09.2010
ரூ92 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சேத்துப்பட்டு பஸ் நிலையம் திறக்கப்படுமா?
ஆரணி, செப். 3: சேத்துப்பட்டில் ரூ92 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம்(படம்) விரைவாகத் திறக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சேத்துப்பட்டு பேரூராட்சியில் சிமென்ட் ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனால் இங்கு பஸ்கள் நிற்காமல், செஞ்சி சாலையில் நின்று வந்தன.
மாவட்ட நிர்வாகம் உத்தரவிடும்போது, பஸ் நிலையத்தில் சில நாள்கள் மட்டும் இங்கு பஸ்கள் நின்று செல்லும். பின்னர் பழைய நிலையே தொடர்ந்து வந்தது.
இதையடுத்து, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என தமிழக அரசு மற்றும் உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் வலியுறுத்தினார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு இங்கு பஸ் நிலையம் கட்ட ரூ30 லட்சத்தை தமிழக அரசு வழங்கியது. பின்னர் பேரூராட்சி நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரூ92 லட்சத்தில் பஸ் நிலையமும் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று, சில மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் கேட்டபோது, பஸ் நிலையம் திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.