தினகரன் 09.09.2010
பெஸ்ட் பஸ் கட்டண உயர்வுக்கு ஒப்புதல்
மும்பை,செப்.9: மும்பையில் பெஸ்ட் பஸ் கட்டண உயர் வுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் கொடுத்துள் ளது. மும்பையில் இயக்கப்படும் பெஸ்ட் பஸ் கட்டணத்தை அதிகரிக்க சமீபத்தில் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி குறைந்த பட்ச கட்டணத்தை 3 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக அதிகரிக்கவும், அதன் பிறகு வரும் கட்டணங்கள் அனைத்திலும் இரண்டு ரூபாய் கட்டண உயர்வை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஒப்புதல் கொடுப்பதற்குக் மாநகராட்சியின் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பஸ் கட்டண உயர்வு தொடர்பான கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் அவர்களின் எதிர்ப்பையும் மீறி கட்டண உயர்வுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி கமிட்டி கூட்டம் மற்றும் மேயரும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வட்டார போக்குவரத்து ஆணையம் இக்கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியபிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் தொடர்பாக நேற்றிரவு தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது. கட்டண உயர்வு 12.50 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. அதேசமயம் மாதாந்திர மற்றும் காலாண்டு பஸ் பாஸ் கட்டணம் சாதாரண மற்றும் ஏசி பஸ்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு மாநகராட்சியில் 110 உறுப்பினர்களும் சிவசேனா&பாஜக கூட்டணிக்கு 115 உறுப்பினர்களும் இருக்கின்றனர். கட்டண உயர்வு குறித்து பெஸ்ட் கமிட்டி தலைவர் சஞ்சய் அளித்தபேட்டியில்,‘ எரிபொருள் விலை அதிகரித்து விட்டதால் கட்டண உயர்வை அமல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசிடம் மானியம் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டோம்.
ஆனால் மாநில அரசிட மிருந்து எந்தவித பதிலும் இல்லை. தற்போது பெஸ்ட் நிதிப்பற்றாக்குறை 351 கோடி ரூபாயாக இருக்கிறது’என்று தெரிவித்தார்.