தினகரன் 26.11.2010
அண்ணா பஸ்நிலைய பணிகள் 4 மாதத்தில் முடிக்க நடவடிக்கை நகராட்சி தலைவர் தகவல்
நாகர்கோவில், நவ.26: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்பு பணி ரூ1.29 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதனால் வடசேரி பஸ்நிலையம் அருகே தற்காலிக பஸ்நிலையம் அமைத்து பஸ்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் அண்ணா பஸ் நிலையம் மேம்பாடு செய்யப்பட உள்ளது. காங்கிரீட் தளம் உறுதியாக இருக்கும் வகையில் தரைதளத்திற்கு கீழ் உள்ள மண் பகுதியை உறுதிப்படுத்தும் பணிகள் முதலில் நடந்து வருகின்றன.
இப்பணிகளை நாகர்கோவில் நகராட்சிதலைவர் அசோகன்சாலமன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பஸ் நிலைய தளத்தில் துளைகள் போடப்பட்டு அவற்றில் சுண்ணாம்பு கரைசல் ஊற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. 1 மீட்டர் ஆழம் வீதம் 9 ஆயிரம் துளைகள் போடப்படுகிறது. அவற்றில் சுண்ணாம்பு கரைசல் ஊற்றப்படுகிறது. இதன் மூலம் அடித்தளத்தின் கீழ் உள்ள மண் உறுதிப்படுத்தப்படும். இதனை தொடர்ந்து காங் கிரீட் பணிகள் துவங்கும். 2 கட்ட காங்கிரீட் போடப்பட உள்ளது. முழுக்க முழுக்க சிமென்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்படும். இதனால் வரும் காலங்களில் தார் அமைக்க வேண்டிய தேவை எழாது. இரவு பகலாக பணிகளை செய்து 4 மாதத்திற்குள் சீரமைப்பு பணி களை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நகராட்சி துணை தலை வர் சைமன்ராஜ், பொறியாளர்கள் தாமஸ், சுரேஷ், கவுன்சிலர் ஐயப்பன், முன்னாள் கவுன்சிலர் முகம்மது ரபீக் ஆகியோர் உடனிருந்தனர்.