தினகரன் 27.12.2010
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ரூ. 17 கோடியில் இரண்டடுக்கு வாகனம் நிறுத்தும் வளாகம்
சென்னை, டிச. 27:
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ரூ. 17 கோடியில் 6,000 சதுரமீட்டர் பரப்பளவில் இரண்டடுக்கு தாழ்தள இரு சக்கர வாகன நிறுத்தும் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்கினார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி., ப.ரங்கநாதன் எம்எல்ஏ, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு செயலாளர் அசோக் டோங்ரே, கவுன்சிலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகன நிறுத்தத்தை தொடங்கி வைத்து, சிறிது நேரம் வாகன நிறுத்தத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் வெ.கண்ணுச்சாமி, உறுப்பினர் செயலர் தயானந்த் கட்டாரியா, துணை தலைவர் சூசன் மாத்யூ, மண்டல குழு தலைவர் கே,தனசேகரன், கோயம்பேடு பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு தினமும் 10 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் வழிவகை செய்யும் வீதத்தில் தீயணைப்பு வசதி, கண்காணிப்பு கேமிரா போன்றவை அமைக்கப்பட்டுள் ளது. வாகன நிறுத்துமிடம் தரைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்தாலும், பூமியின் மேற்பரப்பில் கூரைப்பூங்கா அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் செயற்கை மணற்பாறைகளில் அமைக்கப்பட்ட நீரூற்றுகளும், நீர் வீழ்ச்சிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2008ம் ஆண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றனர்.