தினகரன் 30.12.2010
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொகுதி நிதியில் வில்லிவாக்கம் பஸ் நிலையம் சீரமைப்பு ஜனவரியில் முடியும்
சென்னை, டிச.30:
வில்லிவாக்கம் பஸ் நிலையம் சீரமைப்பு பணி அடுத்த மாதம் முடிவடையும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
வில்லிவாக்கம் பஸ் நிலையம் 1.4 ஏக்கரில் அமைந்துள்ளது. அங்கிருந்து தினமும் 55 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அடையாறு, வேளச்சேரி, பட்டினப்பாக்கம், பிராட்வே, வள்ளலார் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் மொத்தம் 720 டிரிப் இயக்கப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பஸ் நிலையத்தின் இரு பக்கமும் உள்ள தார் சாலைகள் உயர்த்தப்பட்டதால் மழைக்காலத்தில் பஸ் நிலையத்துக்குள் தண்ணீர் தேங்கி விடுகிறது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 60 லட்சம் ஒதுக்கினார்.
இதன் மூலம் தரைதளத்தை 2 அடி உயர்த்துவது, நேரக்காப்பாளர் அறை மற்றும் கழிவறையை சீரமைப்பது, மின்சார வசதி மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், வரும் ஜனவரி இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்றார்.
அவருடன் புரசைவாக்கம் வி.எஸ்.பாபு எம்எல்ஏ, 4வது மண்டல குழு தலைவர் சீனிவாசன், மண்டல அலுவலர் ராஜரத்தினம், மாநகர போக்குவரத்து கழக சிறப்பு அலுவலர் மணி ஆகியோர் வந்தனர்.