மாலை மலர் 4.11.2009
நெரிசலை குறைப்பதற்காக பஸ்கள் செல்ல தனி வழித்தடம்; போக்குவரத்து துறை திட்டம்சென்னை, நவ. 4-
சென்னை நகரில் 500-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 2815 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் லட்சக்கணக்கில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும் செல்கின்றன. வாகனங்களின் பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் கூடிக்கொண்டே செல்கிறது. நெரிசலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
போக்கு வரத்து நெரிசலை குறைக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்க துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் நெரிசலை குறைக்கும் ஆலோசனைகளை அறிக்கையாக அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். இது பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்கள் எவை என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மாநகர பஸ்கள் சில பஸ் நிறுத்தங்களில் நிற்பதில்லை என்று புகார்கள் வருகின்றன. இதற்கு காரணம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்பே காரணம் ஆகும். இதனால் சாலையின் நடுப்பகுதி அல்லது வலது புறப்பகுதிகளில் பஸ்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.
இனி மாநகர பஸ்கள் அனைத்தும் சாலையின் இடது புறம் செல்லும் வகையில் அதற்கான தனி வழித்தடம் ஏற்படுத்த திட்ட மிடப்பட்டு வருகிறது. முதலில் நகரின் முக்கிய சாலைகளில் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.