தினமணி 12.11.2009
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு
பெங்களூர், நவ. 12: பெங்களூரில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ரூ.40 கோடியை ஒதுக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பி-டிராக் என்ற முன்னோடித் திட்டத்தை போக்குவரத்து போலீஸôர் அமல்படுத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென காவல்துறை கோரியிருந்தது. இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெங்களூர் நகரில் வாகனங்களின் சீரான போக்குவரத்துக்கான பி-டிராக் திட்டத்துக்கு ரூ.40 கோடியை ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்த திட்டப்படி, ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான தொகையை ஓய்வூதிய நிதிக்கு வழங்க வேண்டும். அதே அளவு தொகையை அரசும் வழங்கும்.
ஊழியர்கள் ஓய்வுபெறும்போது அவர்களது கணக்கில் சேமிக்கப்பட்ட ஓய்வூதியம் மாதாமாதம் வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 6.7 லட்சம் சைக்கிள்களை 3 மாதங்களில் வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.
மேலும், மாநிலத்தில் ரூ.40 கோடி செலவில் 1082 அங்கன்வாடி மையங்களை கட்டவும், மாதேஸ்வரன் மலைப் பகுதி மக்களுக்கு காவேரி குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.24 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.