தினமணி 17.11.2009
போக்குவரத்து ஒழுங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள்: ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர், நவ. 16: பெரம்பலூர் நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் நகரில் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில்,ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில், திங்கள்கிழமை முதல் செயல்படுத்தப்படும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக பிரசுரங்களை வெளியிட்டு, ஆட்சியர் எம். விஜயகுமார் பேசினார்.
ஆய்வின் போது, நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜே. காஜாமொய்தீன், ஆய்வாளர்கள் கோபாலசந்திரன், தே. சிவசுப்ரமணியன், கோட்டாட்சியர் எம்.என். உதயகுமார், வட்டாட்சியர் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.