தினமணி 15.02.2010
பழனியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு
பழனி, பிப்.14: பழனியில் ரூ.6.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் பிப்.15-ம் தேதி திறக்கப்படுகிறது.
பழனியில் தற்போதுள்ள பஸ் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. திருவிழா நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பஸ் நிலையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டது.
நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் பஸ் நிலையம் அருகில் உள்ள வையாபுரி கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதி பெறப்பட்டு நகராட்சி, திருக்கோயில் நிதி மூலம் சுமார் ஆறரை கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டது.
ஒரே சமயத்தில் ஏராளமான பஸ்கள் நிற்குமாறு புதிய பஸ் நிலைய வளாகம் கட்டப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தை பிப்ரவரி 15-ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சுரேஷ்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் பெரியசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், அரசு கொறடா சக்கரபாணி, சித்தன் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ., ஆட்சியர் வள்ளலார், நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.