தினமணி 26.02.2010
பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள்: மேயர் ஆய்வு
திருச்சி, பிப். 25: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் பேருந்து பயணிகளுக்கு நடைபாதையுடன்கூடிய நவீன நிழல்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நிழல்குடை அமைக்கப்பட்ட பகுதியில் தற்போது ரூ. 13 லட்சத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா பார்வையிட்டார்.
புதைச் சாக்கடை இணைப்பு வேண்டும் என கோரிக்கை வரப்பெற்ற திருவானைக்கா தெற்கு உள்வீதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கீழக்கொண்டையம்பேட்டை குடியிருப்புப் பகுதிகளை மேயர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், கோட்டத் தலைவர் த. குமரேசன், உதவி ஆணையர் வி. நடராஜன், மாமன்ற உறுப்பினர் பி. விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.