தினமலர் 07.04.2010
திண்டிவனம் பஸ் நிலையத்தை... அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நகராட்சியின் நடவடிக்கை அவசியம்
திண்டிவனம்: திண்டிவனம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திண்டிவனம் மேம்பாலத்திற்கு அருகில் நகராட்சி பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து புதுச்சேரி,கடலூர், வந்தவாசி, காஞ்சிபுரம், திருவண் ணாமலை, செஞ்சி, விழுப்புரம் உட்பட பல வெளியூர்களுக் கும், மயிலம், பொம்பூர், திருவக்கரை, ரெட்டணை உட்பட பல சிறிய ஊர்களுக்கும் தினமும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பயணிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களும் பெரிதும் பாதிக்கின்றனர். பஸ் நிலைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் காரை பெயர்ந்து, ஒட்டடை படிந்து, துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் உட்கார போதிய இருக்கை வசதி இல்லை. முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் தரையிலும் உட்கார முடியாமல் சுகாதார சீர்கேடுடன் அப்பகுதி அமைந்துள்ளது.கட்டடத்தில் மின்சார ஒயர் கள் பெயர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் பயணிகளை அச்சுறுத்துகிறது. பஸ் நிலைய நுழைவு வாயில் எங்கும் பார்க்க முடியாத அளவிற்கு படுமோசமாக மேடு பள்ளமாக உள்ளது. பஸ்கள் நிற்கும் வளாகம் முழுவதும் பெயர்ந்து கருங்கல் ஜல்லிகள் சிதறிக் கிடக்கின்றன.
சுகாதாரமற்ற பஸ் நிலைய வளாகத்திற்குள் பயணிகள் காத் திருக்காமல் பஸ் நிலையத் திற்கு வெளியே உள்ள கடையோரங்களில் காத்திருந்து தங்கள் பஸ் வந்ததும் பயணிக்கிறார்கள். பஸ் நிலையத்திற்குள் பயணிகள் வரத்து குறைவால் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பஸ் நிலையம் ஆந்தை, வவ் வால் மற்றும் ஆடு, மாடுகள் ஓய்வெடுக்கும் வளாகமாக மாறி உள்ளது. பஸ் நிலைய நுழைவு வாயிலில் கிடங்கல் ஏரி வாய்க்காலையொட்டி கட்டியுள்ள தடுப்புச் சுவர் இடிந்து கிடக்கிறது. நெடுஞ்சாலையில் திண்டிவனம் ஏரி அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க நகராட்சி முயற்சி மேற்கொண்டது.
ஏரி பகுதியில் பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் புதிய பஸ் நிலையம் அமைக்கும் முயற் சிக்கு 5 ஆண்டுகளாக பின்னடைவு ஏற்பட்டது. இதனிடையே புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. நகராட்சி சார்பில் 6.75 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் துவங்கினாலும் பஸ் நிலையம் கட்டி முடிக்க குறைந்தது ஒரு ஆண்டு காலம் தேவைப்படும். அது வரை தற்போதுள்ள நகராட்சி பஸ் நிலையம்தான் பயன்பாட்டில் இருக்கும். எனவே பயன் பாட்டில் உள்ள பஸ் நிலையத்தில் தற்காலிக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.