தினமலர் 15.04.2010
கரூர் நகர போக்குவரத்து மேம்பாடு கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்.பி., பங்கேற்பு
கரூர்: கரூர் நகர போக்குவரத்து மேம்பாடு பற்றிய கலந்தாய்வு கூட்டம் கரூரில் நடந்தது. கரூர் யூனிட், தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் சங்கர் வரவேற்றார். எஸ்.பி., தினகரன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ஞானசிவக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமசாமி, கரூர் நகராட்சி கமிஷனர் உமாபதி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் நாச்சிமுத்து, லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜு, ரோட்டரி அன்பொளி காளியப்பன், குளோபல் மனித உரிமைகள் சங்க தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் வைக்கப்பட்ட கருத்துகள்:
கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலை எட்டு முதல் 11 மணி வரையும், மாலை நான்கு முதல் இரவு ஒன்பது மணி வரையும் சரக்கு ஏற்றி வரும் வாகனங்களை நகர் பகுதிக்குள் அனுமதிக்ககூடாது. இர வு ஒன்பது மணிக்கு மேல் கா லை ஆறு மணி வரை, காலை 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை மட்டும் சரக்கு வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படும். இரவு 11 முதல் காலை ஐந் து மணிவரை தவிர, மற்ற நேரங்களில் டிரெய்லருடன் டிராக்டர் நகரில் வர அனுமதிக்க கூடாது. மினி பஸ்சுக்காக செயல்படும் பஸ் ஸ்டாண்ட் தற்போது செயல்படும் நகர பஸ் ஸ்டாண்டுடன் இணைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர், வெளியூரில் இருந்து வரும் பஸ் அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் பின்புறத்தில் உள்ள பழைய மார்க்கெட் வழியாக உள்ளே நுழைந்து, வழக்கமான வெளியேறும் வழியாக பஸ் செல்ல நகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
மினிபஸ் அனைத்தும் வரையறுக்கப்படாத இடத்தில் பயணியை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்ணப்பா தியேட்டர் வழியாக அரசு மருத்துவமனை வரை, மனோகரா கார்னம் வழியாக உழவர் சந்தை வரை ஏற்றி, இறக்க கூடாது. சாலையோரத்தில் திருவள்ளுவர் மைதானம் முன் உள்ள டிரான்ஸ்பார்மரை, மைதானத்துக்குள்ளும், கோவை சாலை மின் அலுவலகம் முன் உள்ளதை, அலுவலக வளாகம் உள்ளும், சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளி அருகில் உள்ளதை மேலும் சிறிது தள்ளியும் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவகர் பஜார் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து மின்கம்பமும் ஓரமாக மாற்றப்பட வேண்டும்.
ஜவகர் பஜாருக்கு வரும் டூவீலர்கள் பசுபதீஸ்வரா பெண்கள் பள்ளி அருகிலும், நகராட்சி அருகே ஆசாத் சாலையிலும் நிறுத்தவும், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஐயப்பன் கோவில் முன் லாரிகளை அப்புறப்படுத்தியும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கோவை சாலையில் டூவீலர்கள், சம்மந்தப்பட்ட வியாபார நிறுவனம் முன் கயிறு அடித்து நிறுத்த நிறுவன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் குறுக்கு சாலையில் நிறுத்திக்கொள்ள வேண்டும். கோவை சாலை மின்வாரியம் அருகே எந்த வாகனமும் நிறுத்தக்கூடாது. ஸ்டேட் பாங்க் அருகில் வரும் கார் அனைத்தும் ஜி.ஆர்., மண்டப சாலையில் நிறுத்தப்பட வேண்டும். பசுபதீஸ்வரர் கோவில், மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டுள்ள மேக்ஸி வாடகை வாகனங்கள், வெங்கமேடு பாலத்தின் கீழ் இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி சாலை முதல் திண்ணப்பா தியேட்டர் வரை கிழக்கில் இருந்து மேற்காக மட்டும் அனுமதிக்க வேண்டும். ஜி.ஆர்., மண்டப சாலையை அறிவாலயம் வரை ஒருவழி பாதையாகவும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. போக்குவரத்து டிராபிக் வார்டன்கள், போலீஸார், ரோட்டரி, லயன்ஸ், வர்த்தகர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.