தினமணி 04.02.2010
கொடைக்கானலில் புதிய பஸ் நிலையத்தை 15-ம் தேதி துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
கொடைக்கானல்,பிப்.3: கொடைக்கானல் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நகராட்சிப் பொறியாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம்:
சாம்பாபு: நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு விட்டதா.? சுற்றுலா நிதியின் கீழ் அபிவிருத்தி பணிகள் தொடங்கப்பட்டு விட்டதா?
பொறியாளர்: இந்த ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும். சுற்றுலா நிதியின் மூலம், கொடைக்கானல் நகராட்சிக்கு ரூ. 289 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான, பணிகள் தொடங்கப்பட உள்ளன.
சின்னு: கலையரங்கம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளது. நகராட்சிப் பணிக்கு படித்த பதிவுசெய்த இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும். கொடைக்கானல் ஏரியில் தனியார் துறையினர் படகுகளை விடுகின்றனர். இதனை முறைப்படுத்தி, ஏரியில் விடப்படும் அனைத்து படகுகளுக்கும் வரி விதிப்பு செய்ய வேண்டும்.
தலைவர்: கொடைக்கானலுக்கு, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந் தேதி வருகிறார் அப்போது ரூ. 5 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன பஸ் நிலையத்தை திறந்துவைத்து, வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கிவைக்க உள்ளார். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார். அரசு வகுக்கும் திட்டத்தின்படி நகராட்சி செயல்படும்.
பொறியாளர்: நகராட்சிப் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆசா ரவீந்திரன்: கொடைக்கானலுக்கு புதிய குடிநீர்த் திட்டம் கொண்டு வரும் பணி என்ன ஆனது?
தலைவர்: குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 31.5 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நகரில் 83 கி.மீக்கு புதிய குழாய்கள் அமைத்து, பல்வேறு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு,தினசரி குடிநீர் வழங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேரி: கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில், பல இடங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. அதுபற்றி தகவல் கொடுத்தாலும் மின் பணியாளர்கள் உடனடியாகச் சரி செய்து கொடுப்பதில்லை.
பாலசுப்பிரமணி: கொடைக்கானல் பகுதிகளில் பல வீடுகளில் மின் இணைப்பு விண்ணப்பம் வழங்கி, பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், மீட்டர் இருப்பு இல்லை எனக் கூறி மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர்.
பொறியாளர்: மாநிலம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.