தினமணி 12.11.2009
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஆய்வறிக்கை: ஸ்டாலினிடம் அளிப்பு
சென்னை, நவ. 12: போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் அறிக்கை துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
"அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் விரைவில் அமலாக்கப்படும்' என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் ஆலோசனைகள் வழங்க அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறை சிறப்பு ஆணையாளர் மச்சேந்திரநாதன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
அறிக்கை அளிப்பு... இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஆலோசனைக் குழுவின் கூட்டம், தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பொதுத்துறை செயலாளர் தேவ ஜோதி ஜெகராஜன், போக்குவரத்துத் துறை ஆணையாளர் மச்சேந்திரநாதன், செனனை மாநகர போலீஸ் ஆணையாளர் டி.ராஜேந்திரன், புறநகர் போலீஸ் ஆணையாளர் ஜாங்கிட், ஊழல் தடுப்பு இணை இயக்குநர் சுனில்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் கூறப்பட்ட ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.