Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் கூரை அமைக்க தீர்மானம்

Print PDF

தினகரன் 28.07.2010

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் கூரை அமைக்க தீர்மானம்

வாலாஜாபாத், ஜூலை 28: வாலாஜாபாத் பஸ் நிலையத்துக்கு மேற்கூரை அமைப்பது என்று பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வாலாஜாபாத் பேரூராட்சி மன்றக் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தியாகராஜன், செயல் அலுவலர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எம்பி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வாலாஜாபாத் பஸ் நிலையத்துக்கு மேற்கூரை அமைப்பது, 6வது வார்டு கன்னிகாபுரம் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றுவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ரூ.17 லட்சத்தில் நிழற்குடை கோத்தகிரி பேரூராட்சி ஏற்பாடு

Print PDF

தினமலர் 23.07.2010

ரூ.17 லட்சத்தில் நிழற்குடை கோத்தகிரி பேரூராட்சி ஏற்பாடு

கோத்தகிரி : கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில், ரூ.17 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது கோத்தகிரி பேரூராட்சி. தற்போது, மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நகரை மேம்படுத்த, பேரூராட்சி சார்பில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறை மூலம், கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் - டானிங்டன் இடையே சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. சாலையின் அகலம் அதிகரித்து, வாகனங்களின் பயணத்துக்கு ஏதுவாக உள்ளது.பேரூராட்சி சார்பில், மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றி, சாலையோர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் பெய்த மழையில், மண் சரிவு ஏற்பட்ட பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில், 20 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இதே பகுதியில் 17 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது; விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

கோத்தகிரி பேரூராட்சி தலைவர் போஜன் கூறுகையில், ""கோத்தகிரி நகரை மேம்படுத்த, மன்ற ஒப்புதலுடன் படிப்படியாக பணிகள் நடத்தப்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 17 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது; 40 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு திறந்து விடப்படும்.பஸ் நிலைய உட்புறத்தில், 25 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் ஷீட்கள் மூலம், பஸ் ஸ்டாண்டில் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவர் பெயர் வைப்பது என அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

Print PDF

தினகரன் 30.06.2010

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவர் பெயர் வைப்பது என அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

மேட்டூர், ஜூன் 30: ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவரின் பெயர் வைப்பது என்பது குறித்து வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையம் ரூ.28 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இம்மாதம் 15ம் தேதி, சிறப்பு தீர்மானத்தின் மூலம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் என பெயர் வைக்க மன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா பெயர் எழுதப்பட்டது.

இந்நிலையில் காங்கிரசார் காமராசரின் பெயர் வைக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, காமராஜரின் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், அதன்படி காமராஜரின் பெயர் வைக்க வேண்டும் எனக்கூறி, ஜலகண்டபுரம் காங்கிரஸ் தலைவர் பூஞ்சோலை மற்றும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக நேற்று காலை காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சுசீந்திரகுமார், நங்கவள்ளி வட்டார தலைவர் ஐயண்ணன், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி குணசேகரன் மற்றும் காங்கிரசார், ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் அங்கு சென்ற காங். கட்சி மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.சேகரன், அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவர் பெயர் வைப்பது என முடிவு செய்யலாம் என்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

1975, 1991 ஆகிய ஆண்டுகளில் ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் வைக்க தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் தொடர் நடவடிக்கை இல்லாததால் அந்த கோரிக்கை மறைந்து போனது. 1996ல் காமராசர் நூற்றாண்டு வளைவு வைக்கவும், பேருந்து நிலையத்திற்கு காமராசர் பெயர் வைக்கவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நூற்றாண்டு நினைவு வளைவு வைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பது தொடர்பாக இன்று மாலை வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், ஜலகண்டபுரம் பேரூராட்சி தலைவர் காசி மற்றும் திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

இன்று நடக்கிறது

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு காமராசரின் பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரசார் பேரூந்து நிலையம் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

 


Page 25 of 57