தினமணி 30.06.2010
பழனியில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் திறப்பு
பழனி, பிப். 15: பழனியில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
பழனிக்கு வரும் பக்தர்கள் நலனை முன்னிட்டு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பழனி நகராட்சி முயற்சியால், தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது பஸ் நிலையம்.
திறப்பு விழா நிகழ்ச்சியில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன், அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ஹக்கீம், திண்டுக்கல் எம்.பி. சித்தன், பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் பேசுகையில், குழந்தை இல்லாத தாய் குழந்தை பெற்றது போல, பழனி நகர மக்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் கிடைத்துள்ளது. தற்போதைய துணை முதல்வர், உள்துறை அமைச்சராக இருந்த போது முதல்வர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பொதுப்பணித் துறை, அறநிலையத் துறை அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சியின் பேரில் 26 நாள்களில் திட்டம் ஒப்புதல் பெற்றதோடு, திருக்கோயிலில் இருந்தும் 50 சதம் பங்காக நிதி பெறப்பட்டுள்ளது என்றார்.
பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசும் போது,
பழனிக்கு பல நல்ல திட்டங்களை திமுக அரசு வழங்கியுள்ளது. அதேபோல பாதாள சாக்கடை திட்டம், பச்சையாறு திட்டம் நிறைவேற உதவ வேண்டும் என்றார்.
திண்டுக்கல் எம்.பி. சித்தன் பேசும்போது, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள இடத்தை பெற்றுத்தரும் பட்சத்தில் நகர மக்களுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய வசதிகள் செய்து தர வாய்ப்புள்ளது என்றார்.
துணை முதல்வர் ஸ்டாலின் பேசியது:
பழனிக்கு சராசரியாக சாதாரண நாள்களில் 400, திருவிழா நாள்களில் 500 பஸ்கள் வந்து செல்கின்றன. பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
20 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இங்கு முருகனுக்கு விழா நடப்பது போல தற்போது நடப்பது மு.க. விழா ஆகும்.
பெயர் அழைப்பிதழில் இருந்தும் எதிர்க்கட்சியினர் யாரும் வரவில்லை. திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி வேண்டுமென்றே தற்போது உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஒரு ரூபாய் அரிசி, இலவச டிவி, விவசாயிகள் கடன் தள்ளுபடி என பலவற்றிலும் எல்லா கட்சியினரும் பயனடைந்துள்ளனர். அதிமுக, பாமக, தேமுதிக என பாராமல் அனைவரையும் தமிழர்களாக பாவிக்கிறார் முதல்வர் என்றார்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் கவிதா பார்த்திபன், பழனி ஒன்றியத் தலைவர் வனிதா நவராசு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் வள்ளலார் நன்றி கூறினார்.