தினமணி 15.06.2010
மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையம் இன்று திறப்பு: மு.க.ஸ்டாலின் பங்கேற்புகோவை
, ஜூன் 14: கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கிறார்.இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி
:ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் மத்திய
, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்புடன் ரூ. 7 கோடியில் நவீன பஸ் நிலையம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக நவீன முறையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் இரு மாடிகளுடன் இந்த பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக காத்திருக்கும் அறைகளும், இளம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்காக தனிஅறையும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.÷
மொத்தம் 3.89 ஏக்கர் பரப்பில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க தனிஅறை கட்டப்பட்டுள்ளது. இரு தளங்களுக்கும் பயணிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் லிப்ட் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி லிப்ட் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வாகனங்களை முதல் தளத்தில் பார்க்கிங் செய்யலாம். இதில் 326 இரு சக்கர வாகனங்கள், 18 கார்கள், 64 சைக்கிள்கள் நிறுத்த முடியும். பயணிகளின் பொருட்களை எடுத்துச்செல்ல உதவும் டிராலிகள், வயதானவர்களை அழைத்துச்செல்ல சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. ÷பஸ் நிலைய வளாகத்தில் 4 கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றில் 22 அறைகள் உள்ளன. இந்த பஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழும் பெறப்பட்டுள்ளது. ÷கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், உதகை செல்லும் பஸ்கள் இதுவரை கோவை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு வந்தன. இனிமேல் இந்த பஸ்கள் மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.÷
பஸ் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரகத் தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, கதர்வாரியத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம், துணை மேயர் நா.கார்த்திக், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் வி.பி.செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.