தினமணி 10.06.2010
பாதாள சாக்கடைப் பணி: விழுப்புரத்தில் போக்குவரத்து மாற்றம்
விழுப்புரம், ஜூன் 9: விழுப்புரம் நகராட்சியில் தற்பொழுது நடைபெற்றுவரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணியில் 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பணிகளில் தற்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அண்ணா சிலை முதல் காட்பாடி ரயில்வே கேட் வரை செய்யப்பட வேண்டிய பணிகள் வரும் 14-ம் தேதி முதல் துவக்கப்பட்டு 45 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளன. இப்பணிகளின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மேற்கண்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போக்குவரத்து வழிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இப்பாதையில் செல்லும் பஸ்கள், லாரிகள் வரும் 14-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு பை-பாஸ் சாலையில் சென்று எல்லீஸ் சத்திரம் வழியாக புதிய பஸ் நிலையத்துக்கும், அதே வழியாக மற்ற பகுதிக்கு செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.