தினமணி 17.05.2010
இலவச வீட்டுமனை திட்டத்துக்கு நிலம் வழங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், மே 16: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்துக்கு நிலம் வழங்க விரும்பும் நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வரவேற்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வீட்டுமனையின்றி வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்துக்கு 2010-11ம் நிதியாண்டுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கியுள்ளது.
தனியார் நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலத்தை கிரையம் செய்து பட்டா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத் திடத்துக்கு நிலம் வழங்க விருப்பமுள்ள நில உரிமையாளர்கள் அதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். நிலத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாவட்ட அளவிலான குழு கிரையத் தொகை நிர்ணயம் செய்து உடனடியாக வழங்கப்படும்.
தவிர, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் குடும்பங்களுக்கான மயானம் மற்றும் மயான பாதைகளுக்கு நிலம் வழங்க விரும்புவோரிடம் இருந்தும் ஒப்புதல் கடிதம் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு நிலம் வழங்க உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம். இத்தகவலை ஆட்சியர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.