தினகரன் 24.05.2010
குடிசை பகுதிகளில் அரசு கட்டித்தரும் வீடுகள் தரமானதாக இல்லை
பெங்களூர், மே 24:குடிசைப்பகுதிகளில் அரசு கட்டித்தரும் வீடுகளின் தரம் மலிவானதாக இருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாநகரின் குடிமக்கள் தன்னார்வ தொண்டுநிறுவனம்(சிவிக்) என்ற அமைப்பு, ‘பெங்களூர் குடிசைப்பகுதியின் நிலை’ என்ற தலைப்பிலான ஆய்வில் ஈடுபட்டது. பெங்களூரில் உள்ள குடிசைப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிசைப்பகுதிகளில் அரசு கட்டித்தரும் வீடுகள் தரமற்றதாக இருப்பதாகவும், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2009 ஜூன் முதல் 2010 பிப்ரவரி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஜவகர்லால்நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டம், நகர ஏழைகளுக்கு அடிப்படை சேவைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்துவது பற்றியும் ஆராயப்பட்டது. இந்த அறிக்கை பெங்களூர் மாநகராட்சி மேயர் எஸ்.கே.நடராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆய்வறிக்கையின் அடிப்படையில் குடிசைப்பகுதியை சேர்ந்தவர்களுடன் மேயர் எஸ்.கே.நடராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது சாமுண்டிநகர் சேரியை சேர்ந்த லட்சுமி கூறுகையில்,‘குடிசைகளை இடிக்கும்போது, மாற்று வீடுகள் வழங்க முடியாதப்பட்சத்தில், அது போன்ற திட்டங்களை ஏன் மேற்கொள்கிறீர்கள்? வேறு வீடுபார்த்து வசிக்கும் அளவுக்கு வசதியிருந்தால், நாங்கள் ஏன் குடிசைகளில் வசித்துவருகிறோம்?’ என்றார். இதற்கு பதிலளித்த மேயர் நடராஜ்,‘பாதிக்கப்பட்டுள்ள குடிசைவாசிகள் மற்றும் கவுன்சிலர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்.
புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்படும்வரை குடிசைவாசிகளை வேறு இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார். தொண்டு நிறுவன ஆய்வில் தகவல் .