தினகரன் 31.05.2010
குடிசைகள் அகற்றம் நேற்றும் தொடர்ந்தது
பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தை அடுத்த நூக்கம்பாளையத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக குடிசைகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.பெரும்பாக்கத்தை அடுத்த நூக்கம்பாளையத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 26 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2007ம் ஆண்டு அந்த இடம் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, 830 குடிசைகள் அகற்றப்பட்டன. தற்போது அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மீதமுள்ள, 1,036 குடிசைகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. தாம்பரம் ஆர்.டி.ஓ., சவுரிராஜன், சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயந்தி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முன்னிலையில் குடிசைகள் அகற்றும் பணி நடந்தது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் மட்டும் 640 குடிசைகள் அகற்றப்பட்டன. மற்ற குடிசைகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.