Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தான பத்திரம் ஒப்படைப்பு

Print PDF

தினமலர் 11.06.2010

நெல்லையில் வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தான பத்திரம் ஒப்படைப்பு

திருநெல்வேலி : நெல்லையில் அரசு உத்தரவுக்கு புறம்பாக வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தானம் பத்திரம் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் ரூ.2 கோடி வரை நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கமிஷனரிடம் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் அலுவலகத்திற்குட்பட்ட சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட வீட்டுமனைப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மனைப்பிரிவுகளுக்கு தெருவிளக்கு கட்டணம், ரோடு வசதி, வடிகால் வசதி, கச்சா வடிகால் வசதி, பூங்கா மற்றும் குடிநீர் வசதிக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் சென்னை ஊரமைப்பு துறை இயக்குனருக்கு மனைப்பிரிவுக்கு ஒப்புதல் பெற வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை வளர்ச்சிக்கான கட்டணங்களை செலுத்தி அனுமதி பெற்று மனைப்பிரிவுகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என ஊரமைப்புத்துறை இயக்குனரிடம் இருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு வந்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை வளர்ச்சித்துறை கட்டணங்களை வசூலிக்காமல் நெல்லை மாநகராட்சிக்கு நில ஒப்படைப்பு தான பத்திரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வரவேண்டிய தெருவிளக்கு கட்டணம் ரூ.22 லட்சமும், பாதாள சாக்கடை பைப்புத் தொகை ரூ.6.66 லட்சமும், மெட்டல் ரோடு அமைக்க ரூ.1.48 கோடியும், குடிநீர் குழாய் அமைக்க ரூ.5 லட்சமும், வடிகால் கச்சா, வடிகால் பூங்கா அமைப்பு கட்டணம் என சுமார் ரூ.2 கோடி வரை மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்கப்படாமலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் செலுத்தப்படாத நிலையிலும் மாநகராட்சியின் பொறியாளர்களாலும், அதிகாரிகளாலும் சுமார் ரூ.2 கோடி வரை நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதற்குரிய கட்டணம் பொதுமக்களிடம் வசூல் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உத்தரவுக்கு புறம்பாக தான பத்திரம் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் நிதியிழப்புக்கான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதியிழப்பு குறித்து விசாரணை மாநகராட்சி கமிஷனர் தகவல் : இந்த பிரச்னை குறித்து மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் கூறுகையில், "அரசு உத்தரவுக்கு புறம்பாக தான பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். கமிஷனர் அதிகாரத்தையும் மீறி தான பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும். இதில் தவறு கண்டு பிடிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றார்'

Last Updated on Friday, 11 June 2010 06:09