தினமலர் 06.07.2010
வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு
ஈரோடு: ஈரோட்டில் வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு நகரில் சம்பத்நகர், பெரியார் நகர், முத்தம்பாளையம் திட்டங்களில் வீடு கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 25 ஆண்டுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
நில உரிமையாளர்களுக்கும், வீட்டுவசதி வாரியத்தினருக்கும் இடையே நிலம் விலை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் குடியிருக்கும் பெரும்பாலானோருக்கு வீட்டு பத்திரம் கிடைக்காமல் உள்ளனர். 25 ஆண்டுக்கு முன் வீடு வாங்கியவர்கள் அந்த வீட்டை பலரிடம் கை மாற்றியுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஒரு சிலருக்கு மட்டும் வீட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் கூறியதாவது: சென்றாண்டு ஈரோடு பெரியார் நகர் ஸ்டோனி பிரிட்ஜ் அருகில், வீட்டுவசதி வாரியம் சார்பில், நவீன வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு விண்ணப்பம் கேட்கப்பட்ட உடனேயே ஒரு மாதத்தில் அனைத்து வீடுகளும் பதிவாகிவிட்டன. தற்போது லிஃப்ட் வசதியுடன் கூடிய அந்த வீட்டில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த வீடுகள் 570 சதுர அடியில் கட்டப்பட்டன. வீட்டின் விலை 9.65 லட்சம். தற்போது இதே வீடுகளுக்கு எதிரில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை வீட்டுவசதி வாரியம் துவக்கியுள்ளது. மொத்தம் 72 வீடுகள் கட்டப்படுகின்றன. வீட்டின் மொத்த அளவு 670 சதுர அடி. ஒரு ஹால், இரண்டு பெட்ரூம், ஒரு சமையல் அறை, பாத்ரூம் என கட்டப்படுகிறது. இதுதவிர வீட்டை ஒட்டி பால்கனி அமைக்கப்படுகிறது. லிஃப்ட் வசதியும் வருகிறது. இந்த வீட்டின் மதிப்பு 13.6 லட்சம் ரூபாய். அனைத்து வீடுகளுமே முடிந்து விட்டன. ஓராண்டுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.