தினமணி 25.07.2010
குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மதுரை, ஜூலை 24: மதுரை மாநகராட்சிப் பகுதியில் குடிசைகளை கான்கிரீட் வீடாக்கும் பி.எஸ்.யூ.பி. திட்டத்துக்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் இதுவரை 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 5 ஆயிரம் பேருக்கு கான்கிரீட் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திட்ட விதிமுறைப்படி ஒரு வீட்டின் அளவு 274 சதுர அடியாக இருக்க வேண்டும்.
மேலும் வீடு கட்டும் பணியின் ஒவ்வொரு நிலையாக 4 தவணைகளில் அந்தந்த மண்டல உதவி ஆணையர்கள் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. நிதி உதவி வழங்குவதில், காலதாமதம் ஏற்படுவதாக புகார் வரப்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் தாமதமின்றி உடனடியாக நிதியுதவி வழங்க உதவி ஆணைர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஆகவே குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் குடியிருப்போர் சம்பந்தப்பட்ட வார்டு மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, அதில் கூறியுள்ளபடி உரிய ஆவணங்களுடன் பூர்த்திசெய்து பணி உத்தரவை பெற்றுக்கொள்ளலாம். 5உடனடி நிதி உதவி செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது எனவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.