தினகரன் 09.08.2010
பெங்களூரில் 15 லட்சம் குடிசைவாசி அமைச்சர் தகவல்
பெங்களூர், ஆக.9: பெங்களூரில் 570 குடிசைப்பகுதிகள் உள்ளன. இவற்றில் 15லட்சம்பேர் வசித்துவருகின்றனர் என்று அமைச்சர் கட்டா சுப்ரமண்ய நாயுடு தெரிவித்தார்.
லக்கரேயில் 65 குடியிருப்புகளை துவக்கிவைத்து அவர் பேசியதாவது: பெங்களூரில் 570 குடிசை பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 15 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் 2,704 குடிசைப்பகுதிகள் உள்ளன. இதில் 2000 குடிசைப்பகுதிகள் அரசு நிலங்களில் அமைந்துள்ளன. நகர ஏழைகளுக்கு மேலும் நிறைய வீடுகளை கட்டித்தர அரசு விரும்புகிறது. மேலும் வசிப்பிட சான்றிதழும் அவர்களுக்கு வழங்க இருக்கிறது.
குடிசையில்லா நகரம், மற்றும் மாநிலம் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு நிதி பங்கு அளிக்க மாநில அரசு தயாராக இருக்கிறது. ராஜிவ் ஆச்சரே திட்டத்தின் கீழ் நிலத்தின் உரிமை பெண்கள் மீது பதிந்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.