தினகரன் 25.08.2010
எம்.எம்.ஆர்.டி.ஏ.கட்டும் வீடுகளுக்கு அடிப்படை வசதி செய்து தர மாநகராட்சி சம்மதம்
மும்பை,ஆக.25: மும்பையில் திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகளுக்கு எம்.எம்.ஆர்.டி.ஏ.கட்டும் வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாநகராட்சி சம்மதித்துள்ளது.
மும்பையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு திட்டப்பணிகளால் ஏராளமான குடிசைவாசிகள் தங்களது வீடுகளை இழக்க நேரிடுகிறது. அவ்வாறு வீடுகளை இழப்பவர்களுக்கு எம்.எம்.ஆர்.டி.ஏ. வேறு இடத்தில் வீடுகளை கட்டிக்கொடுக்கிறது. இந்த வீடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வந்தது.
ஏற்கனவே மஹாடா கட்டிய வீடுகளில் குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் போன்ற வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி மறுத்தது. இதையடுத்து இப்பிரச்னை குறித்து எம்.எம்.ஆர்.டி.ஏ.கமிஷனர் ரத்னாகர் மும்பை மாநகராட்சி கமிஷனர் ஷத்தியாவை சந்தித்து பேசினார். இதில் எம்.எம்.ஆர்.டி.ஏ.கட்டும் கட்டிடங்களை தங்களது அதிகாரிகள் சோதனை செய்த பிறகு குடிநீர், கழிவுநீர்கால்வாய் வசதி, குப்பைகள் அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதாக ஷத்திரியா உறுதியளித்துள்ளார்.