தினமணி 08.09.2010
ஓகலிபுரம் குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள்: திட்டத்துக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
பெங்களூர், செப்.7: ஓகலிபுரம் வார்டில் குடிசைப் பகுதி மக்களக்கு ரூ.2.52 கோடி செலவில் 84 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் அடிக்கல் நாட்டினார்.
பெங்களூர் காந்தி நகர் சட்டப்பேரவை தொகுதியில் அடங்கிய ஓகலிபுரம் வார்டில் குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க அந்த வார்டு கவுன்சிலர் குயின் எலிசபத் நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி சார்பில் ஓகலிபுரம் 5-வது மெயின் உள்ள 84 குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு வீடும் தலா ரூ.3 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடந்தது. தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ்குண்டுராவ் இதில் கலந்து கொண்டு வீடு கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் கவுன்சிலர் குயின் எலிசபத், முன்னாள் கவுன்சிலர் டிஜேசி சக்கரவர்த்தி, காங்கிரஸ் பிரமுகர் காந்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் குறித்து கவுன்சிலர் குயின் எலிசபத் கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3 லட்சம் செலவில் மொத்தம் ரூ.2.52 கோடி செலவில் 84 வீடுகள் கட்டப்படவுள்ளன என்றார் அவர்.