தினகரன் 15.11.2010
குடிசை மாற்று வாரியத்தின் 2232 வீடுகள் விரைவில் திறப்பு ரூ3.06 கோடியில் மின் வசதி
கோவை, நவ. 15: கோவையில் குடிசை மாற்று வாரியத்தின் 2232 வீடுகளை விரைவில் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மின் வசதி செய்ய 3.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 54 கோடி ரூபாய் செலவில் உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 2232 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது இறுதி கட்ட பூச்சு மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது.
2050 வீடுகள் முழு அளவில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. பணி முடிந்த வீடுகளுக்கு மின் இணை ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகத்தில் டிரான்ஸ்பார்மர், மின்சார பிட்டிங் மற்றும் ஒயர் இணைப்பு வசதி ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 3.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படும். ஓரிரு மாதத்திற்குள் மின் இணைப்பு வசதி செய்து முடிக்கப்படும். அதற்கு பின்னர், குடியிருப்புகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவை நகரில், குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த குடியிருப்புகள் ஒதுக்கப்படும். குறிப்பாக, ஏற்கனவே குடிசை மாற்று வாரியத்தின் பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் ஒப்படைக்கப்படும்.
குளம், ஆட்சேபகர நீர் நிலையில் வசிப்போர்களில் சிலருக்கும் இந்த குடியிருப்புகளில் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.